பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.
பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்
வாசித்துவிட்டுத் தொடர்ந்து வாசிக்கவும்.
சந்தோஷின் தொலைபேசியில் தெரிந்த அவளது பெயரைப் பார்த்ததுமே எடுத்துப் பேசடா என்று மனது குறுகுறுக்க, நண்பனின் தொலைபேசியில் ஒரு பெண்ணின் அழைப்பு என்ற நாகரிகங்களையெல்லாமே மறந்துவிட்டுத் தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக் ‘ஹலோ’ என்றான் ஹரீஷ்.
‘ஹலோ, இஸ் சந்தோஷ் ஓவர் தேர்?’ என்ற எதிர்முனையின் குரலைக் கேட்டு மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடிக்க, அவள்தான், அவளேதான் என்று இதயம் வேகமெடுக்க, தானாகவே கிளம்பிய சிரிப்பையும் கட்டுப்படுத்திக்கொண்டு
‘நோ, ஐம் ஹிஸ் ப்ரன்ட் ஹரீஷ்’
‘பார்டன்’
‘ஐம் ஹரீஷ், நீங்க தேவா சேரின்ட மகள் தானே?’
………….
‘ஹலோ….. ஹலோ......’
எதிர்முனையின் மௌனத்தை தொலைபேசி இணைப்பின் ‘பீப்’ ஒலி துண்டித்தது. கண நேரத்துக்குள் கலைந்துவிட்ட தன் சந்தோஷத்தை ஹரீஷ் பெருமூச்சாக வெளிவிட, ‘யார் மச்சான் ஃபோனில?’ கேட்டுக்கொண்டே வந்தான் சந்தோஷ்.
இலண்டன் மாநகரத்தின் வானத்தை மாலைச்சூரியன் செம்மையாக்கிக்கொண்டிருந்தது. அப்போதே ஆரம்பித்துவிட்ட பனியின் துகள்கள் மெதுவாக வீசிய காற்றில் ஆடியபடியே கீழிறங்கிக்கொண்டிருக்க, யன்னலினூடான சூரியக்கதிர்களைத் தன்மேல் படரவிட்டபடி இதையெல்லாம் ரசிக்கமுடியாதவளாய் வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள் வைஷாலி. சந்தோஷிற்கு அழைப்பெடுத்த அக்கா ஒரு வார்த்தைகூடப் பேசாமல் லைனைக் கட் செய்ததும், சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் அறைக்குள் சென்று அடைத்துக்கொண்டதும், வேகமாக வீட்டைவிட்டு வெளியே போனதும் அவள் மனதில் குழப்பத்தையும் பயத்தையும் உண்டாக்கிவிட்டிருந்தது. தான் ஒத்திகை பார்த்து அரங்கேற்றிய நாடகம் தன் கண்ணெதிரிலேயே திசைமாறிப்போனதை மீண்டுமொருமுறை அசைபோடத்தோடங்கினாள் அவள்.
அவளுக்கும், அக்காவிற்குமான நேற்றய அந்த உரையாடல் மிக நீண்டதாக இருந்தது. முற்றிலும் புதிய ஒரு மனிதருடன் பேசுவதுபோல உணர்ந்தாள். எதைப் பேசுகிறேன் என்று அவளுக்கே தெரியாத அளவிற்குப் பேசினாள். சமயங்களைப்பற்றிப் பேசினாள். சாதியைப்பற்றிப் பேசினாள். யாழ்ப்பாணத்து அயலவர்கள் பற்றிப் பேசினாள். சந்தோஷைப்பற்றிப் பேசினாள். இறுதியாக அவனுடனான காதலைப்பற்றிப் பேசினாள். அவளது காதல் புரிந்துகொள்ளப்பட்டபோது சந்தோஷப்பட்டாள். அந்தக் கணம் முதல் அக்கா சந்தோஷிற்கு அழைப்பெடுத்த கணம்வரை எல்லாம் அவள் விரும்பியபடியேதான் நடந்திருப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டாள். அதிகம் வார்த்தைகள் இல்லாத அந்த ஒற்றை நிமிடநேர தொலைபேசி உரையாடல் அவ்வளவு கனமானதா என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவள் தோள் தொட்டுத் திருப்பப்பட்டாள்.
பரீட்சைப் பெறுபேற்றை எதிர்பார்க்கும் மாணவனின் ஆர்வத்தோடு, கண்ணில் நிராகரிப்பின் வலியோடு, ஒரு நிராயுதபாணியாய், கருணையற்ற உலகத்தின்முன்னால் வைக்கப்படும் கடைசிப்பிரார்த்தனையாக அவள் நிமிர்ந்து பார்க்க, அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அக்கா.
சில நாட்களுக்குப்பிறகு…
அரைமணிநேரத் தாமதத்துடன் கட்டுநாயக்க விமானநிலைத்தில் வந்திறங்கிய ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் விமானத்திலிருந்து காதலையும், கடைமையையும் எதிர்நோக்கியபடி இறங்கிக்கொண்டிருந்தாள் லாவண்யா.
- பதிவர் கன்கோனினால் தொடரப்படும்.
16 comments:
கதை நல்லாருக்கும் எண்டு நம்புறன். எதுக்கும் சில கடமைகளை முடிச்சிற்று வாசிக்கிறன். ;-)
அடப்பாவிகளா....
இப்பிடியா என்ன மாட்டிவிடுறது...
அவ்வ்வ்வ்வ்.... #அழுகிறேன். அவ்வ்வ்வ்....
கதை எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஒரு அப்பாவிய இப்பிடியா மாட்டிவிடுறது.... :'(
கதை நல்லாருக்கு...
நல்லா இருங்கோ.... :'(
கதாநாயகியின் பெயரை ஒருமுறை கூட பயன்பாடுத்தாமல், தங்கையை வைத்தே கதை சொல்லும் உங்கள் உத்தி சிறுகதை உலகிற்கு புதிது...
வாழ்த்துக்கள்... #ச்சும்மா.... :P
//விமானத்திலிருந்து காதலையும், கடைமையையும் எதிர்நோக்கியபடி இறங்கிக்கொண்டிருந்தாள் லாவண்யா//
அழைத்துவர கன்கொன் ஏர்போர்ட்டுக்கு ரெடியா?
நல்லா கொண்டு போயிருக்கீங்க.:)
அருமை சுபாங்கன்
கங்கு.. வெயிட்டிங்கு.. பட்டயக் கிளப்பவும்..
கிரவுண்டில் விட்டேன் கட்டுநாயக்காவுக்கு கொண்டு போய்ட்டீங்க..;)
இன்னொருத்தியா?
(லோஷன் மயங்கிட்டான்)
LOSHAN
www.arvloshan.com
இவ்வளவு நேரமும் கொஞ்சம் லைட்டாப் போய்க்கொண்டிருந்த கதை.. கனதியாகிறது.
உங்கள் எழுத்துக்களின் கனதியும் பயன்படுத்தபட்டுள்ள ஆழமான வார்த்தைகளும் தொடர்களும் ஈர்த்தன :)
அடுத்தவருக்குக் கொஞ்சம் கஷ்டத்தையும் எதிர்பார்ப்பையும் கொடுத்துள்ளீர்கள்.
super
சுபாங்கன்..கெளதம் மேனனின் இலங்கை வாரிசு.. இலங்கையில ஆரம்பிச்சு UKபோய் மீண்டும் இலன்கையில.. ;)
ரொம்ப நல்லா இருக்குங்க.
அண்ணே நீங்கள் கதையின் சுவாரசியத்தை அதிகரித்து இருக்கீங்க!!!
பார்க்கலாம் கோபி அண்ணே எப்படி கூட்டி வரப்போறார் எண்டு!!!!
சொல்லிவைச்சது போல் இருவரும்(பவனும் சுபாங்குவும்) குறுங்கதையாக எழுதி இருக்கின்றீர்கள், நல்ல திருப்பம்.
வசனநடைக்கு என் மனதைப் பறி கொடுத்தேன்...
அருமை சுபாங்கு. :-)
கதை வழமையான உங்கள் பாணியில் நல்லாத்தான் இருக்கு.. ஆனாலும்
ஹலோ, இஸ் சந்தோஷ் ஓவர் தேர்?’ நோ, ஐம் ஹிஸ் ப்ரன்ட் ஹரீஷ்’
‘பார்டன்’
‘ஐம் ஹரீஷ், நீங்க தேவா சேரின்ட மகள் தானே?’
கொஞ்சம் அந்நியமாக இருக்கிறது. அல்லது நான் இப்படியான உரையாடல்களுக்கு பழக்கப்படவில்லை.
அஞ்சலோட்டம் நல்லாப் போகுது.
Post a Comment